அறிஞர் அண்ணா வகுத்த குறிக்கோளுக்கு ஏற்ப தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நெருங்கிய திராவிட கலாச்சார கூட்டுறவு நிலவப் பாடுபடுவது; அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது என்பது தி.மு.கழகத்தின் குறிக்கோள் ஆகும்.
அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் அவற்றுக்கான உரிய இடத்தைப் பெற்றுத் தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் – மத்தியில் கூட்டாட்சியும் (Autonomy for States & Federation at Center) உருவாகிடவும் தொண்டாற்றுவது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடு.
சமூக நீதி-சுயமரியாதை-பகுத்தறிவு வழியில் சமத்துவத்தை அடைவதை இலக்காகக் கொண்ட அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் காலத்திற்கேற்ற வகையில் ஊடகங்களை வெற்றிகரமாகக் கையாண்டு, மக்களிடம் தனது கொள்கைகளைக் கொண்டு சேர்த்து வருகிறது.
பொதுக்கூட்டம், பத்திரிகை, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைத்தளம் என அனைத்து வகை ஊடகங்களிலும் முத்திரை பதித்த தலைவர்களையும் மூத்த நிர்வாகிகளையும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் மற்றுமொரு புதிய மைல்கல்லாய் உருவாக்கப்பட்டது தகவல் தொழில் நுட்ப அணி.
இணையதளத்திலும் நேரடிக் களத்திலும் முனைப்புடன் செயல்பட்டு கழகக் கொள்கைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு வாய்ந்த அணியாக செயல்பட்டு வருகிறது. எளிய மக்களின் தேவைகளையும் , கருத்துக்களையும் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணியையும் சுமந்து பயணிக்கிறது.
தலைமை முதல் கிளைக் கழகம் வரை விரிந்து பரந்த பேரியக்கத்தின் அனைத்து உடன்பிறப்புகளுக்குமான இணைப்புப் பாலமாக செயல்பட்டு வருகிறது தகவல் தொழில்நுட்ப அணி. கழக பணிகளையும், கழக அரசின் சாதனைகளையும் கடைக்கோடி கிராமம் வரை கொண்டு சேர்க்கும் பொறுப்புடன், எதிர்கட்சியினர் பரப்பும் வதந்திகள்-அவதூறுகளைத் தகர்க்கும் பதிலடிகளையும் உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறது.
பேரறிஞர் அண்ணா உருவாக்கிய ஜனநாயக அரசியல் இயக்கத்தை-பேரியக்கமாக வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் வழியில்-இந்தியாவின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவாக்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்-கழகத் தலைவர் தளபதி.மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடலை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியினைத் தொய்வின்றித் தொடர்ந்து வருகிறது திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணி.